தமிழகத்தில் அரசியல் சதுரங்க வேட்டை! ~~~~ தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அரசியல் சதுரங்க வேட்டையைப் பார்த்து தமிழக மக்கள் குமுறிக்கொண்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு, அதிமுக அணிகள் மோதல் விவகாரத்தை விமர்சித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 23)  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் அரசியல் சதுரங்க வேட்டை! ~~~~ தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அரசியல் சதுரங்க வேட்டையைப் பார்த்து தமிழக மக்கள் குமுறிக்கொண்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு, அதிமுக அணிகள் மோதல் விவகாரத்தை விமர்சித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 23) 


தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கும் அரசியல் சதுரங்க வேட்டையைப் பார்த்து தமிழக மக்கள் குமுறிக்கொண்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு, அதிமுக அணிகள் மோதல் விவகாரத்தை விமர்சித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 23) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்ப நிலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில், "அதிமுக அம்மா பிரிவும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா பிரிவும் அண்மையில் ஒன்றிணைந்துள்ளன. இவர்கள் பிரிந்தபோதே, இது கொள்கை பிரச்னையினால் அல்ல, அதிகார போட்டியின் காரணமாகவே பிரிவு நடந்துள்ளது. இது அரசியல் சந்தர்ப்பவாதமே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்தது. இந்த மதிப்பீடு சரியானது என்பதை இவர்களின் இணைப்பு நிரூபிக்கிறது. கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் மற்றும் ஊழல் என்பதே பிரிவுக்கும் இணைப்புக்கும் பின்னால் உள்ள காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை. தினகரன் தலைமையிலான குழுவினரின் கருத்து வேறுபாடும் இதே ரகத்தில் எழுந்திருப்பது தான்” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், “ஒரு பகுதி எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த தங்களது ஆதரவை விலக்கிக்கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இச்சூழலில், உடனடியாக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அரசியல் ஆதாய நோக்கத்தில் தமிழக அரசியலில் பாஜக அரசின் தலையீடு தொடர்ந்து வருகிறது என்று பாஜக-வைக் குற்றம் சாட்டியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி, “பாஜக தனக்கு உகந்தவாறு வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு பயன்படுத்தப்பட்டன. இந்தத் தலையீட்டின் விளைவே அதிமுக பிரிவுகளின் இணைப்பு நிகழ்ந்திருக்கிறது. கடந்த காலத்தில் ஆளுநர் வருவதில் ஆன தாமதமாக இருக்கட்டும், இந்த இணைப்பை ஒட்டி ஆளுநரின் வருகை துரிதமாக நடந்ததாக இருக்கட்டும், இரண்டுமே தற்செயல் என்று கருத இயலவில்லை. ஒட்டுமொத்தத்தில் அரசியல் சதுரங்க வேட்டை தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருப்பதைப் பார்த்து மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றனர்” ஆதங்கம் தெரிவித்துள்ளது.

நீட் நுழைவு தேர்வு பிரச்னையில் பாஜக அரசு தமிழகத்துக்குப் பெரும் துரோகம் இழைத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி நிறைவேற்றிய தீர்மானத்தில், “லட்சக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடந்திருக்கிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. ஜி.எஸ்.டி-யால் மக்களும், சிறு, குறு தொழில்முனைவோரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். தமிழகத்தின் அனைத்துப் பகுதியினரும் போராட்டக்களத்தில் நிற்கின்றனர். போராடுபவர்களைக் குண்டர் சட்டம் உள்ளிட்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள் துரத்துகின்றன. வர்தா புயல்/வறட்சி நிவாரணம் தொடங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது வரை, உணவு பாதுகாப்பு சட்டத்தைக்காட்டி பொது விநியோக முறையை சீர்குலைப்பது முதல் சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய அச்சுறுத்துவது வரை, பாஜக அரசு, தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்படுகிறது. இது எதைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல், தமிழகத்தின் நலனையும் தமிழக மக்களின் வாழ்வுரிமையையும் பலிகடா ஆக்கி, அதிகார வேட்கை தணித்துக் கொள்ளப்படுகிறது. அரசியலின் தரம் அதலபாதாளத்துக்கு இறங்கியிருக்கும் இந்நிலை வேதனைக்குரியது” என்று ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here