நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் 24 லட்சம் காலி பணியிடங்கள்: மத்திய அரசு அறிவிப்பு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் 24 லட்சம் காலி பணியிடங்கள்: மத்திய அரசு அறிவிப்பு!


பல்வேறு துறைகளில் சுமார் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் குறித்து மக்களவை மழைக்காலக் கூட்டத் தொடரில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அப்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளில் 10.1 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 2,24,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரண்டாவது இடத்தில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறை உள்ளது. இதில் 5,40,000 காலிப் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆயுதப் படையில் மட்டும் 90 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது மத்திய அரசு. இதனால் மாநிலங்களில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைச் சமாளிப்பதில் பெரும் சிக்கல் நீடிப்பதாகக் கூறியுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே துறையில் 2.4 லட்சம் இடங்களும், அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான 2.2 லட்சம் இடங்களும், சுகாதார மையங்களில் பணியாற்றத்தக்க வகையில் 1.5 லட்சம் இடங்களும், ராணுவத்தில் 62,084 இடங்களும், துணை ராணுவத்தில் 61,509 இடங்களும், தபால் துறையில் 54,263 இடங்களும், உயர்தர சிகிச்சையளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 21,740 இடங்களும், உயர்கல்வித்துறையில் 12,020 இடங்களும் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் நீதிபதிகள், பதிவாளர்கள் என 5,853 இடங்கள் காலியாக இருப்பதால் முக்கியமான வழக்குகள் தேக்கநிலையில் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பில் உள்ள மிகப்பெரிய பிரச்னையாக கருதப்படுவது, தங்களது தகுதிக்குரிய பணி கிடைக்காமல் மற்ற வேலைகளில் சுமார் 94 விழுக்காடு பணியாளர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது தான். தற்போதைய அறிவிப்பினைத் துணையாகக் கொண்டு, தொழில் துறையில் முதலீட்டை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகள் வழங்கும் தொழிற்சாலைகளைத் தொடங்கி, பணியாளர்களின் திறனை அதிகரித்தால் மட்டு,மே வேலையின்மைப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here