உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாலினப் பாகுபாடுகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாலினப் பாகுபாடுகள்


சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃபின் மரணம் மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் ஐஐடி வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நாடு முழுவதும் உள்ள உயரிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையினர், தலித் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாகிவருகிறது.

கேரளாவைச் சேர்ந்த மாணவி நுழைவுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பு படித்துவந்தார். வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்த பாத்திமா தனது தற்கொலைக் குறிப்பில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனே தனது மரணத்துக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஹேமச்சந்திரன் காரா, மிலிந்த் பிரம்மே ஆகிய பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்.

கல்லூரியில் பேராசிரியர்களால் மத ரீதியிலான துன்புறுத்தல்களை சந்திப்பதாக பெற்றோர்களிடம் தெரிவித்துவந்த பாத்திமா நவம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் மூன்று பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
மனிதம் மறந்த கல்வி நிறுவனங்கள்!
மாணவியின் மரணம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் எழுத்தாளர் பெருந்தேவி தனது பார்வையை முன்வைத்துள்ளார். “கல்வி நிறுவனங்களாகட்டும் பணியிடங்களாகட்டும் சாதிய இருப்பாக ஒருவரை மீளுருவாக்கும் இடங்களாக இருக்கின்றனவே தவிர, அந்த இருப்பைக் கேள்வி கேட்பவராக அவரை மாற்றுவது இல்லை, அல்லது அபூர்வமாகவே உள்ளது. சொல்லப்போனால், இந்தியத் தொழில்நுட்பக்கழகம் போன்ற இடங்களில் அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டும் சமூக உயிரியாக வாழ ஒருவருக்கு உதவாது என்பதால்தான் மனிதவியல் / சமூக அறிவியல் துறைகளும் அங்கே சேர்க்கப்பட்டன என்பது என் புரிதல். ஆனால் அப்படி ஒரு துறையில் பயிலும் மாணவிக்கு இந்தக் கதி எனும்போது துறை தாண்டி பரந்த நிறுவனமாக தொழில்நுட்பக் கழகத்தின் கோளாறுகள் முன்நிற்கின்றன” என்றார்.
உணவைக் கொண்டு நிகழும் சாதி அரசியல்!
மேலும் அவர் கல்வி நிறுவனங்களுக்குள் உணவைக் கொண்டு நிகழும் சாதி அரசியலையும் விவரிக்கிறார். “இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் சாதிய நிறுவனங்கள் என்று சொல்லும்போது நேரடியான சாதி முழக்கங்கள் என்ற பொருளில் அல்ல, அதைத் தாண்டி அங்கே இருக்கும் நடைமுறைகள் யார் யார் அடையாளப்படுத்திக்கொள்ளும் வகையில் உள்ளன, எந்த அளவுக்கு மாணவர்களை உட்கொணர்பவைகளாக (inclusive spaces) உள்ளன என்பதைப் பார்க்கவேண்டும். இங்கே குறிப்பிட்ட ‘உயர்’சாதிகளின் அல்லது மதங்களின் (சமணம் உட்பட) உணவுப் பழக்கவழக்கங்கள் ஏன் இந்த நிறுவனத்தின் பொதுவெளிகளை வரையறை செய்பவையாக, பிரிப்பவையாக மாறின என்பதை யோசிக்கவேண்டும். மேலும் இப்படி வரையறை செய்வது, பிரிப்பது இவையெல்லாம் திடீரென அமுல்படுத்தப்பட்டவை அல்ல.

நம் சமூகத்தில் சேர்ந்து உண்ணுதல், திருமணம் இவ்விரண்டில்தான் முக்கியமாக புழுங்கும் சாதிகள், புழங்கா சாதிகள் என்று வகைப்படுத்திப் பார்க்கும் பழக்கம் இன்று வரை வலுவாக இருக்கிறது. தவிர, சாப்பாட்டு இடப் பிரிவினை நடைமுறைகளுக்கு என்று வரலாறு உண்டு. ‘பிராமணர்களுக்கு தனி இடம்,’ ‘தனிப் பந்தி’ போன்ற பிரிக்கப்பட்ட உணவுப் பொதுவெளிகளுக்கும் இவற்றுக்குமான தொடர்பை மறுத்துவிட முடியுமா” என்று கேள்வி எழுப்புகிறார்.
“சமணராக இருக்கட்டும் அல்லது அய்யராக இருக்கட்டும், ஒரு அய்யரோ சமணரோ தன் உணவுத்தட்டில் என்ன இருக்கலாம் என்பதை மாத்திரம்தான் முடிவு செய்யமுடியும். தன் அருகே யார் அமரலாம், அவர் தட்டில் என்ன இருக்கலாம் என்பதை முடிவு செய்ய அவர் யார்? ஒரு குறுகிய அளவில்கூட ஜனநாயகப் பொதுவெளி என்பதற்கு இடமில்லாத ஒரு கல்வி நிறுவனத்தில், இதை மாற்ற முனையாத கணிசமான பேராசிரியர்கள் மத்தியில் மாணவர்கள் அந்நியமாக உணர்வது இயல்பே.”
பெண் என்பதும் ஒரு காரணம்தான்!
மேலும் இந்த விவகாரத்தில் பெரும்பாலானோர் முன்வைக்கும் சாதி, மத பிரச்சினைகளோடு சேர்ந்து பலரும் கவனத்தில் கொள்ள மறந்த பால் அடையாளத்தையும் பெருந்தேவி கவனத்தில் கொள்கிறார்.

“எந்த அளவுக்கு இந்து ‘உயர்’சாதியினரின் குழுமம் ஒரு இஸ்லாமியரை, அல்லது தலித்தை அந்நியப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு ஆண்களின் கூட்டம் பெண்களை அந்நியப்படுத்தக்கூடியது. இன்றுவரையில்கூட சமூகப் பொதுவெளிகளில் அந்நியமாகத்தான் ஒரு பெண் உணரவைக்கப்படுகிறாள். இன்றும்கூட எத்தனை பெண்கள் தனியாக ஓட்டலுக்கோ திரையரங்குகளுக்கோ போகிறார்கள்? இன்றைக்கும்கூட அப்படித் தனியாக யாராவது சென்றால் முறைத்துப்பார்க்கப்படுவதுதான் நடைமுறை. (தனிப்பட்ட விதிவிலக்குகள் இருக்கலாம். அது சாதி விஷயத்திலும் உண்டு என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.) இங்கே ஒருவரின் அடையாளம் என்பது சாதி அடையாளம், மத அடையாளம் மாத்திரமல்ல, பால் அடையாளமும்தான். குறுக்குவெட்டு அரசியல்களைப் பேசாமல் வசதியாக சாதி அல்லது மதம் அல்லது பால் என்று மட்டும் பேசுவது அவரவர் இடத்தை நியாயப்படுத்திக்கொள்ள மாத்திரம்தான் உதவும்” என்கிறார் பெருந்தேவி.

Subscribe Here