ஆசிரியர் வேலை நிறுத்தம் கருணாநிதி கண்டனம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆசிரியர் வேலை நிறுத்தம் கருணாநிதி கண்டனம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்; அலட்சியம் காட்டும் அரசு: கருணாநிதி கண்டனம்

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை. அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது. அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா? கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வர வேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here