ஓபிஎஸ் குறித்து திமுக புகார் மனு! தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ...... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஓபிஎஸ் குறித்து திமுக புகார் மனு! தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ......


தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கியுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு புகார் மனு அளித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

தமிழகத்தில் துணை முதல்வராக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வம், 2015 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் சொத்துப் பட்டியல் தாக்கல் செய்தார். அதற்கும், வருமான வரித் துறையில் ஓபிஎஸ் செலுத்தியுள்ள சொத்துக்களின் விவரங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

இது குறித்து, அவர் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குனருக்கு நேற்று (மார்ச் 12) புகார் மனு அனுப்பியுள்ளார். இதில், ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தெந்த நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளனர் என்றும், எந்தெந்தச் சொத்துக்களை பினாமிகளின் பெயரில் வாங்கியுள்ளனர் என்றும் தனித்தனியாகக் குறிப்பிட்டுள்ளார்.

“ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப் மற்றும் மகள் கவிதா பானு ஆகியோர் பல நிறுவனங்களில் இயக்குனர்களாக உள்ளனர். இவர்கள் பெயரில் ரூ.200 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாக அறிகிறேன். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 99 ஏக்கர் இடத்தை, ஒரு நிறுவனம் 99 வருடக் குத்தகைக்கு எடுத்திருந்தது. 2012ஆம் ஆண்டுடன் குத்தகைக் காலம் முடிவடைந்த பிறகு, சந்தை விலையைவிடக் குறைந்த விலைக்கு அதை பினாமி மூலம் வாங்கியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.140 கோடி. இதேபோல பல்வேறு விளைநிலங்களையும் அவர்கள் வாங்கியுள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் பெயரிலும் அவரது சகோதரர் குடும்பத்தினர் பெயரிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தையும் பற்றி வருமான வரித் துறைக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

ஓபிஎஸ் மீது அளித்துள்ள புகார் குறித்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை எடுக்கும் நடவடிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு கொடுப்போம் என்றும் பாரதி தெரிவித்துள்ளார். அப்போதும் உரிய பதில் கிடைக்காவிட்டால், நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here