ஆளுநர் வஜுபாய் வாலா, பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிரான வழக்கில், நாளை (மே 19) மாலை கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதாகத் தெரிவித்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்றே (மே 15), ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து இரு கட்சித் தலைவர்களும் இதனை உறுதிப்படுத்தினர். ஆனாலும், 104 உறுப்பினர்களைப் பெற்றுள்ள பாஜகவைத் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சியமைக்குமாறு அழைப்பு விடுத்தார் ஆளுநர்.
இதனை எதிர்த்து, மே 16ஆம் தேதியன்று நள்ளிரவு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது காங்கிரஸ் மற்றும் மஜத. இரவில் இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண், காப்டே அடங்கிய அமர்வு. இதன் முடிவில், எடியூரப்பா முதலமைச்சராகப் பதவியேற்பதற்குத் தடைவிதிக்க முடியாது என்றும், இந்த மனு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நேற்று (மே 17) கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனக் கோரினார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, காங்கிரஸ் மற்றும் மஜத தொடுத்த வழக்குடன் சேர்த்து இதனை விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை, இன்று (மே 18) காலை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, ஆளுநரின் முடிவு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் தெரிவித்தனர் நீதிபதிகள். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பெரும்பான்மையை யார் முதலில் நிரூபிக்க வேண்டும் என்பது குறித்து கேள்வி எழுப்பினார். மஜத மற்றும் காங்கிரஸ் இடையே தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லை என்று, தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது பாஜக.
இந்த இரு மனுக்களும் இன்று காலை 10.45க்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
முகுல் ரோத்தகி வாதம்
முதலில் எடியூரப்பா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கர்நாடக ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் வாசித்தார். 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்ட முகுல் ரோத்தகி, ‘நாங்கள் எந்த வித தேர்தல் கூட்டணியும் வைக்கவில்லை. ஆயினும் பாஜகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது., நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம்.
எதிர்த் தரப்பு வழக்கறிஞர் முந்திய விசாரணையின்போது சர்க்காரியா கமிஷன் வழிகாட்டுதல்களை ஆளுநர் பின்பற்றவில்லை என்று சுட்டிக் காட்டினார். சர்க்காரியா கமிஷன் என்பது சட்டமல்ல, வழிகாட்டுதல்கள்தான். ஆளுநரின் முடிவே இறுதியானது’’ என்று அபிஷேக் சிங்க்விக்கு பதில் சொல்லிவிட்டு,
“தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டிருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் -காங்கிரஸ் கூட்டணி என்பது தூய்மையான கூட்டணி அல்ல., அது சந்தர்ப்பவாத கூட்டணி’’ என்று வாதாடினார்.
உடனடி நம்பிக்கை வாக்கெடுப்பு
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “எடியூரப்பாவின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தே கேள்விக்குரியவை ஆக உள்ளன. தேர்தல் ஆணையம் முடிவுகளை முழுதாக அறிவிக்கும் முன்பே பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுவிட்டது என்று அறிவித்தார் எடியூரப்பா.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருக்கிறது என்று தெரிந்த பின்னர், ஆளுநருக்கு கடிதம் எழுதி ஆட்சி அமைக்க நேரம் கேட்கிறார். நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம். எங்களுக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது என்று. ஆனால், எடியூரப்ப்பாவோ நான் ஏ அல்லது பி அல்லது சி அல்லது எக்ஸ் அல்லது ஒய் ஆகியோரைச் சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைப்பேன் என்கிறார். இதை எப்படி ஆளுநர் ஏற்றுக் கொண்டு ஆட்சி அமைக்க அழைத்தார்? அதுவும் பதினைந்து நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறார்.
எனவே அவ்வளவு கால அவகாசம் வழங்காமல் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்று வாதாடினார் அபிஷேக் சிங்வி.
வாக்கெடுப்புக்கு அவசரமில்லை: ரோத்தகி
ஆனால் எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இதை உடனடியாக மறுத்தார்.
“ஆளுநர் இதுவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவருடைய ஆதரவு யாருக்கு என்று கையெழுத்திட்ட கடிதங்களைப் பெறவில்லை. இந்நிலையில் உடனடியான நம்பிக்க்கை வாக்கெடுப்பு இப்போது அவசியம் இல்லை என்று கருதுகிறேன். மேலும் தற்காலிக சபாநாயகர் கூட இன்னும் நியமிக்கப்படவில்லை. இதற்கான நேரம் தரப்படவேண்டும். எனவே நாளையோ உடனடியாகவோ நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது’’ என்று வாதிட்டார்.
மேலும் காங்கிரஸ் மற்றும் மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் தனிமைப்படுத்தி அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
ஆளுநரின் சுய விருப்பம்
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் சார்பில் ஆஜரான இன்னொரு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “ . உடனடி வாக்கெடுப்பு நடத்த வேண்டியது மிக அவசியம். இது ஆளுநரின் விருப்பத்துக்கான விஷயம் அல்ல. ஆளுநர் சுயமாக முடிவெடுக்கலாம் என்றாலும் அது அரசியல் அமைப்பு சாசனத்துக்கும், சட்டத்துக்கும் உட்பட்டே இருக்க வேண்டும். எனவே உடனடியாக கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்க்கெடுப்பு நடத்திட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதி சிக்ரி, “இது எண்ணிக்கை சம்பந்தப்பட்ட விவகாரம். உடனடியாக முடிவெடுகப்படவேண்டிய விவகாரம். ஆளுநர் எடுத்த முடிவு சரியா தவறா என்பதை சட்டப்படி பிறகு முடிவெடுக்கலாம். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதே உடனடி தீர்வு’’ என்று கருத்து தெரிவித்தார்.
அப்போது எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “அப்படியே நம்பிக்கை வாகெடுப்பு நடத்தினாலும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
11.40க்கு தீர்ப்பு!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று காலை 11.40 க்கு தீர்ப்பை வழங்கினார்கள்.
“கர்நாடக சட்டமன்றத்தில் நாளை (மே 19) மாலை 4 மணிக்கு எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ரகசிய வாக்கெடுப்பாக இருக்காது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக, இடைக்கால சபாநாயகரை நியமிக்க வேண்டும். ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக உடனடியாக நியமனம் செய்யும் ஆளுநரின் முடிவு நிறுத்தி வைக்கப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எடியூரப்பா அரசு முக்கிய கொள்கை முடிவுகள் மேற்கொள்ளக் கூடாது’’ என்று உத்தரவிட்டனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
இதை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று அபிஷேக் சிங்வி உச்ச நீதிமன்ற வளாகத்தில் வர்ணித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து 15 நாள் அவகாசம் தரப்பட்ட பாஜக நாளை மாலையே நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக