2011-12 நிதியாண்டு தேசிய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் 5.02 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கணக்குப்படி 2.86 கோடிப் பேர் வரையில் மட்டும்தான் இதுவரையில் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான இலவசக் காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு முன்மொழியவுள்ளது. இதற்கான வரைவுத் திட்டத்தை தொழிலாளர் அமைச்சகம் தயாரிக்கிறது.
அதுமட்டுமின்றி கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகைகள் வழங்குவது குறித்தும், சுகாதாரம், மகப்பேறு பயனுதவிகள், வீடு மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றை வழங்குவது குறித்தும் ஒன்றிய அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த வரைவு தயாரிக்கப்படுகிறது. மே 21ஆம் தேதிக்கு முன்பாக வரைவுத் திட்டத்தை தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஒன்றிய அரசு இரண்டு முக்கிய காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆயுள் காப்பீட்டுக்கு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டமும், விபத்துக் காப்பீட்டுக்கு பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.330 ஆண்டொன்றுக்குச் செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். விபத்துக் காப்பீட்டுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.12 செலுத்தினால் ரூ.2 லட்சம் கிடைக்கும். ஒன்றிய அரசு மானியம் வழங்கி வரும் துறைகளில் மானியத் தொகையை குறைத்துக்கொண்டும், நிறுத்தியும் வருகிறது. இந்தச் சூழலில் 5 கோடி ஊழியர்களைக் கொண்டுள்ள ஒரு துறைக்கு இலவசக் காப்பீட்டுத் திட்டத்தை முன்மொழியவுள்ளது. அதேவேளையில் காப்பீட்டுத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக