ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?: குறைகளை சரி செய்ய ஒரு வாரம் கால அவகாசம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?: குறைகளை சரி செய்ய ஒரு வாரம் கால அவகாசம்*

ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி என்பது குறித்த விவரத்தை அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-இல் தொடங்கி, ஜூலை 10-ஆம் தேதி முடிந்த பின்னர் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது.

இதற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்த 1,04,453 பேருக்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

ஒரு வாரம் கால அவகாசம்: இந்த தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால், அதைச் சரிசெய்துகொள்ள ஜூலை 4-ஆம் தேதி வரை கால அவகாசத்தை பல்கலைக்கழகம் அளித்துள்ளது.

அதற்கு செயலர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அலுவலகத்தை நேரில் அணுகி சரிசெய்துகொள்ளலாம்.

*கலந்தாய்வு வழிமுறைகள் என்ன?*

ஆன்-லைன் கலந்தாய்வு 5 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு சுற்றுக்கும் 15000 முதல் 30000 மாணவர்கள் வரை, தகுதி தரவரிசைப் படி பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர்.

மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்திலும், மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

கலந்தாய்வு முன்வைப்புத் தொகையான ரூ.5,000-த்தை (எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ மாணவர்களுக்கு ரூ. 1,000) இணையதளம் மூலமாகத் செலுத்திய பின்னர், தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவு விருப்பத்தை வரிசைப்படி பதிவு செய்ய வேண்டும்.

முன்வைப்புத் தொகையை வரவோலையாக உதவி மையத்தில் செலுத்தலாம்.

அவ்வாறு கல்லூரி, பாடப் பிரிவு விருப்பத்தை வரிசைப்படி பதிவு செய்ய ஒவ்வொரு மாணவருக்கும் மூன்று நாள்கள் ஒதுக்கப்படும்.

அதன் பின்னர் விண்ணப்பதாரர் அளித்த விருப்ப வரிசை மற்றும் தரவரிசைப்படி தற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்படும்.

இதை மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் அடுத்த நாள் லாகின் செய்து பார்த்துக்கொள்ள முடியும்.

பின்னர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தற்காலிக இடஒதுக்கீட்டை இரண்டு நாள்களுக்குள் விண்ணப்பதாரர் உறுதிப்படுத்த வேண்டும்.

அல்லது கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு விருப்பத்தை ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மாணவர்களுக்கு எந்த ஒதுக்கீடும் செய்யப்படாது.

இருந்தபோதும், விண்ணப்பதாரருக்கு அடுத்த சுற்று இருந்தால், அதில் கலந்து கொள்ளலாம்.

இந்தச் சுற்றில் விண்ணப்பதாரரின் உறுதிப்படுத்தப்பட்ட தேர்வு இறுதி செய்யப்பட்டு, முறைப்படி ஒதுக்கீடு வழங்கப்படும்.

அவ்வாறு ஒதுக்கப்படும் கல்லூரியில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் மாணவர்கள் சேர்ந்துவிட வேண்டும்.

வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் கட்டணமின்றி கலந்தாய்வில் பங்கேற்றுக் கொள்ளலாம்.

இது தொடர்பான சந்தேகங்களுக்கு 044 - 22359901 - 20 வரையிலான தொலைபேசி எண்களையும் 18004259779 என்ற கட்டணமில்லா எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here