
ஜான்சன் & ஜான்சன் பேபி டால்க் பொருட்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்குக் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்க அமெரிக்காவின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் ஆரம்பத்தில் 550 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட அமெரிக்காவின் மிசெளரி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி, தண்டிக்கும்படியான சேதங்களை ஏற்படுத்தியதற்காகக் கூடுதலாக 4.7 பில்லியன் அபராதம் விதித்தார்.
மருந்துத் துறை ஜான்சன் & ஜான்சனின் தயாரிப்பான குழந்தைகள் பவுடருக்கு எதிராகத் சுமார் 9,000 சட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
நீதிமன்றத் தீர்ப்பு 'ஆழ்ந்த ஏமாற்றம்' தருவதாகக் கூறிய நிறுவனம் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கூறியிருக்கிறது. ஆறு வாரக் கால விசாரணையில், பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பல ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கான பவுடர் மற்றும் பிற பவுடர் பொருட்களைப் பயன்படுத்தியதால் கர்ப்பப்பை புற்றுநோயை ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்த வழக்குத் தொடுத்த 22 பெண்களில் ஆறு பேர் கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டனர்.
தனது நிறுவனத்தின் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பது ஜான்சன் & ஜான்சன், நிறுவனத்திற்கு 1970களிலேயே தெரிந்தபோதிலும், அதன் அபாயங்களைப் பற்றி இந்நிறுவனம் நுகர்வோரை எச்சரிக்கத் தவறிவிட்டதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக