டெல்லி : மிகுந்த கடன் பிரச்சனையால் தத்தளித்து வரும் பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை, தனியார் மயமாக்கவோ அல்லது மூடவோ கூடாது என்று அதன் ஊழியர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஊழியர்களுக்கு கூட சரிவர சம்பளம் கொடுக்க முடியாமல், செயல்பாட்டு மூலதனமும் இல்லாமல், மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாமல் பல இணைப்பகங்கள் இருளில் மூழ்கிக் கிடப்பதாகவும் முன்னதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படலாம் இல்லையேல் மூடப்படலாம் என்றும் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.
பிரதமருக்கு கடிதம்
ஆனால் தற்போது மோசமான நிதிப்பிரச்சனையில் உள்ள இந்த நிறுவனத்தினை மூட போவதாக பேசப்பட்டு வருவதாகவும், ஆக இந்த பொதுத்துறை நிறுவனத்தினை மூடக் கூடாது என்றும் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மோசமான நிதி நிலைமையில் உள்ள இந்த நிறுவனத்தினை புதுபிக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிக்கலான சூழ்நிலைகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஆற்றிய பங்கை வலியுறுத்தி ஊழியர்கள், அரசாங்கத்திடம் நிவாரணம் கோரியுள்ளதோடு, ஜம்மு காஷ்மீரின் சமீபத்திய பிரச்சனைகளின் போது, காஷ்மீரில் அரசாங்க செயல்பாட்டாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் சேவைகளை வழங்குவதற்காக பி.எஸ்.என்.எல் லேண்டுலைன் மற்றும் மொபைல் சேவையையே பெரிதும் நம்பினர்.
அதிலும் நிறுவனம் பெரும் இழப்புகளை சந்தித்த போதிலும், அந்த சேவைகளை தடையின்றி செய்து வந்ததையும் நினைவு கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு தான் காரணம்
ஏனெனில் சில பாதுகாப்பு காரணங்களால் வேறு எந்த ஆப்பரேட்டருக்கும் இந்த சேவைகளை வழங்க அனுமதிக்கப்படவில்லை என்றும், இந்த நிலையிலேயே பி.எஸ்.என்.எல் நாட்டின் தொலைதூர பகுதிகளில், தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் நாடு முழுவதும் 17,000 – 18,000 சேவை இணைப்பகங்களை வழங்கி வருகிறது என்றும், இதனால் இந்த நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 3,000 – 4,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது என்றும், இவ்வாறு சேவை வழங்கப்படாவிட்டால் இந்த கிராமங்கள் எல்லாம் துண்டிக்கப்பட்டு விடும் என்றும் கூறியுள்ளது.
நஷ்டத்திற்கு காரணம் ஊழியர்களா?
பி.எஸ்.என்.எல் இழப்புக்கு முக்கிய காரணம் அதன் பணியாளர் செலவு என்று நிர்வாகமும் மற்றும் ஊடகமும் தவறான கருத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் இது உண்மை இல்லை. இதனால் வேதனை அடைந்த ஊழியர்கள், பி.எஸ்.என்.எல் பலருக்கு நேரடியாக வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இதன் பெரும்பாலான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை அதன் சொந்த ஊழியர்களை வைத்தே செய்து வருகின்றது என்றும், ஆனால் மற்ற நிறுவனங்கள் தங்களது சேவைக்காக பெரும்பகுதியை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனராம்.
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates